×

திண்டுக்கல்லில் ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்விக்கடன்: கலெக்டர் வழங்கினார்

திண்டுக்கல், ஜூன் 25: திண்டுக்கல்லில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்விக்கடனை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி நிகழ்ச்சி திண்டுக்கல் ஜிடிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் உதவித் திட்ட அலுவலர் செல்வராஜ், ஜிடிஎன் கலைக்கல்லுாரி இயக்குநர் துரை, முதன்மைக் கல்வி அலுவலர் நசருதீன், சமூக நல அலுவலர் புஷ்பகலா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருவாசகம் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் என்ற புதிய திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை வேலை வாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். எதிர்காலத்தில் எந்த துறையில் படிக்க வேண்டும் என்பதை பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் முடிவு செய்து தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், தொடர் வகுப்புகள் அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், 2022 – 23ம் கல்வி ஆண்டு முதல் 108 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 34,478 உயர்கல்வி வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்பட்டு. வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. உயர் கல்வி சேராத மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடத்தப்பட்டு 112 மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரி, மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்களில் 40 மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 4 அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் என்ஐஐடி கல்லூரியில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் கோட்ட அளவில் 1,616 மாணவர்கள் கண்டறியப்பட்டு, வருவாய் சான்றிதழ்கள், உதவித்தொகை, கல்வி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஜூலை 1 மற்றும் 7ம் தேதிகளில் கொடைக்கானல் மற்றும் பழநியில் நடைபெறும் முகாம்களிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்விக்கடன்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...